கோவை மாவட்ட அவனாசி திருப்பூர் பல்லடம் கிளைகளின் சிறப்பு கூட்டம் மாநிலச் செயலர் பங்களிப்பு
அன்பார்ந்த தோழர்களே !
கடந்த 1-3-25 சனிக்கிழமை காலை 1030 மணியளவில் நமது AIBDPA திருப்பூர், அவினாசி மற்றும் பல்லடம் கிளைகளின் சார்பில் இணைந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 65க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்குபெற்றனர். சிறப்புக் கூட்ட நிகழ்விற்கு தோழர்கள் P. ரத்தினம், அவினாசி ஆரோக்கியநாதன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர். திருப்பூர் கிளைச் செயலாளர் தோழர் K. விஸ்வநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் தோழர். சௌந்தரபாண்டியன், மாநில அமைப்புச்செயலர் தோழர் ஜாபர் வாழ்த்துரை வழங்கி திருப்பூர், அவினாசி கிளைகளின் செயல்பாடுகளை விவரித்தனர். மாவட்டச் செயலர் தோழர் குடியரசு தனது வாழ்த்துரையில் மாவட்டச்சங்கத்தின் செயல்பாடுகளையும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளையும் விளக்கிப் பேசினார்.
விழுப்புரம் தோழர் முன்னாள் மாநில உதவித் தலைவர் தோழர் மாணிக்க மூர்த்தி அவர்கள் தனது வாழ்த்துரையோடு, ஒன்றிய அரசின் பட்ஜெட் எவ்வாறு சாதாரண மக்களுக்கும் தொழிலாளர் , விவசாயிகளுக்கும் எதிரானதாகவும்,கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவானதாகவும் உள்ளது என்பதையும் தகுந்த புள்ளிவிபரங்களோடு விளக்கிப் பேசினார்.
மாநிலச்செயலர் தனது உரையின் ஆரம்பத்தில் ஒய்வூதியர்களை எங்கும் அலைய விடாமல் அலுவலகத்திலேயே DLC வழங்க மொபைல் போன், பயோமெட்ரிக் மெசின், ஸ்கேனிங் மற்றும் பிரிண்டர் வாங்கியது, திங்கள், வியாழக் கிழமைகளில் ஓய்வூதியர் சந்திப்பு என திருப்பூரின் செயல்பாடுகள் ஒரு முன்னுதாரணமாக விளங்குவதாய்ப் பாராட்டினார்.
தொடர்ந்து ஓய்வூதியர் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், அவற்றைத் தீர்க்க பல்வேறு வழிகளிலும் மாநில, மத்திய சங்கங்கள் செயலாற்றி வருவதையும் எடுத்துரைத்தார். ஓய்வூதிய மாற்றம், சொசைட்டி பிரச்சினைகள் நீதிமன்ற வழக்குகளால் தாமதப்பட்டாலும், தொடர்ந்து போராடிப் பெற்றே தீருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
* நமது மாநிலச்சங்கம் சார்பில் தமிழில் வெளிவர இருக்கும் ஓய்வூதியர் பத்திரிகைக்கு ஐந்தாண்டுச் சந்தாவாக தோழர்கள் ரூ.500/ தந்துதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
* ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை BSNL ல் தற்சமயம் குறைந்து கொண்டே வரும் சூழலில் ஆயுள் சந்தா வருவதும் குறைந்து விட்டது.எனவே சங்கச்செலவுகளுக்கு வருடத்திற்கு ரூ.200/ தர முன்வந்தால் சங்கச்செயல்பாடுகள் சிறக்க உதவியாய் இருக்கும் என்ற ஙேண்டுகோளை முன்வைத்தார். ( மாநிலம்- 120, மாவட்டம்- 40, கிளை- 40 எனப் பிரித்து அனுப்ப வேண்டும்)
* நமது அகில இந்திய மாநாடு கோவையில் 2025 டிசம்பரில் நடைபெறவுள்ளது.சிறப்பாக நடத்த வேண்டும்.
* இறுதியில் நமது ஓய்வூதியர்கள் பெறும் ஓய்வூதியம் விலைவாசி ஏற்றம், பணவீக்கம், பெருகிவரும் வேலையின்மை, காண்டிராக்ட் முறை வேலை ....போன்ற பல்வேறு புறச்சூழல் தாக்கங்களால் சுரண்டப்பட்டு தேய்ந்து வருகிறது. இன்னொரு ஆபத்தாக உறவினர், பெற்ற பிள்ளைகளுக்கு உதவிகள், கடன்கள், வங்கிக் கடன்கள் என்று "பாசவலை"யில் சிக்கி சிரமப்படுவதும் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதும் நேர்கிறது.
எனவே ஓய்வூதியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதைத் தான் சந்தித்த ஓய்வூதியர்களின் அனுபவங்களில் இருந்து அவர் எடுத்துரைத்தது நெஞ்சைத் தொடும் விதமாய் இருந்தது.
* தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்டச்செயலரும், மாநிலச்செயலரும் பதில் உரைத்தனர்.
* இன்றைய கூட்டத்தில் மாநிலச் செயலரின் வேண்டுகோளுக்கிணங்க 14 தோழர்கள் ஓய்வூதியர் பத்திரிகை சந்தாவுக்கு ரூ.500/ ம், 6 தோழர்கள் ஆண்டு சந்தா ரூ.200/ம் வழங்கியுள்ளதை செயலர் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி உரைத்தார்.
* தோழர் பழனிவேல்சாமி திரளாக வந்து கூட்டத்தைச் சிறப்பித்த தோழர்களுக்கும் கிளைச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் அனைத்து உறுப்பினர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி கூறினார். பிரிண்டர் வாங்க முன்நின்ற தோழர்கள் தண்டபாணி, S.N.சுப்பிரமணியம் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கிளை உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக சென்னையில் செயல்பட்டு வரும் நமது கிளைத் தோழர் சீனிவாசராகவன் அவர்களுக்குக் கிளை உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்;
கூட்டம் நிறைவு பெற்றது.
கிளைச் செயலர்
0 Comments